சமூக பராமரிப்பு சேவை சீர்திருத்தம்.

29.07.2026 10:31:22

பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ஆண்டி பர்ன்ஹாம், நாட்டின் சமூக பராமரிப்பு (Social Care) சேவையில் நிலவும் நீண்டகால நெருக்கடியை தீர்ப்பது தனது அரசியல் வாழ்க்கையின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த விடயம் தனக்கு அரசியல் பொறுப்பாக மட்டுமன்றி, குடும்ப அனுபவத்துடன் தொடர்புடைய மிகுந்த உணர்வுபூர்வமான விடயமாகவும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆண்டி பர்ன்ஹாமின் தந்தை ராய் பர்ன்ஹாம், அல்சைமர் (Alzheimer’s) நோயால் பாதிக்கப்பட்டு தற்போது பராமரிப்பு இல்லத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். தனது தந்தைக்கு தற்போது தன்னை பிரதமராக அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும், அது குடும்பத்திற்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

“எனது தந்தைக்கு நான் பிரதமராகியிருப்பது தெரியாது. அவர் அறிந்திருந்தால் பெருமைப்படியிருப்பார். ஆனால் அது இப்போது சாத்தியமில்லை என்பதே மிகுந்த சோகம்,” என பதவியேற்ற பின்னர் பர்ன்ஹாம் உணர்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மேலும், சமூக பராமரிப்பு துறையை முழுமையாக சீர்திருத்துவதற்காக தனது அரசியல் செல்வாக்கையும் முழுமையாக பயன்படுத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன், கிரேட்டர் மான்செஸ்டர் மேயர் தேர்தலில் போட்டியிட்டபோதும் தனது தந்தையின் உடல்நிலையை எடுத்துக்காட்டிய பர்ன்ஹாம், “சமூக பராமரிப்பு பிரச்சினைக்கு ஒரே தீர்வு அரசியல் கட்சிகள் துணிச்சலுடன் ஒன்றிணைந்து நிரந்தர தீர்வை உருவாக்குவதுதான்” என்று தெரிவித்திருந்தார்.

 

அவர் சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில், “தேசிய பராமரிப்பு சேவையை உருவாக்குதல்” (Building the National Care Service) என்ற வெள்ளை அறிக்கையை வெளியிட்டு, சமூக பராமரிப்பு அமைப்பை மாற்றும் திட்டத்தை முன்வைத்திருந்தார். எனினும், கடந்த 14 ஆண்டுகளாக அரசியல் கட்சிகளுக்கிடையில் இதுகுறித்த ஒருமித்த கருத்து எட்டப்படாததால் அந்த சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்து வருகிறது.

பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஆண்டி பர்ன்ஹாம், தற்போது அந்த நீண்டகால வாக்குறுதியை நிறைவேற்றுவாரா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.