ஆளுநர் பதவியை ராஜினாமா செய்யும் தமிழிசை சௌந்தர்ராஜன்!?

18.03.2024 08:21:55

தெலுங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் பொறுப்பு வகித்து வந்த தமிழிசை சௌந்தர்ராஜன் பதவியை ராஜினாமா செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன் தற்போது தெலுங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். சமீபமாக மக்களவை தேர்தலுக்கான பணிகளை பாஜக தொடங்கியது முதலே தமிழிசை தான் எம்.பியாக போட்டியிட விரும்புவது குறித்து தொடர்ந்து பாஜக மேலிடத்திடம் பேசி வந்தார்.
 

அவர் புதுச்சேரியில் போட்டியிட விருப்பப்பட்ட நிலையில் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து முதல்வராக உள்ள ரெங்கசாமியிடம் புதுச்சேரி தொகுதியை பாஜகவுக்கு அளிப்பது குறித்து பேசப்பட்டு வந்தது. சமீபத்தில் முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி தொகுதியில் தங்களது கூட்டணியிலிருந்து பாஜக போட்டியிடும் என அறிவித்தார்.
 

அப்போதிருந்தே புதுச்சேரியில் தமிழிசை சௌந்தர்ராஜன் தான் போட்டியிட போகிறார் என பேசிக் கொள்ளப்பட்டது. பல நேர்க்காணல்களில் அவரே மறைமுகமாக இதுகுறித்து பேசினார். இந்நிலையில் தனது தெலுங்கானா ஆளுநர் பதவி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை தமிழிசை சௌந்தர்ராஜன் ராஜினாமா செய்வதாகவும், புதுச்சேரி தொகுதி பாஜக வேட்பாளராக விரைவில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார் என்றும் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது.