2047 ஆம் ஆண்டுக்குள் பாரதத்தை உருவாக்குவோம்

15.08.2024 07:23:46

இந்தியாவின் 78ஆவது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் 11வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, ‘தேசத்திற்காக தியாகம் செய்த எண்ணற்ற தியாகிகளுக்கு இன்று அஞ்சலி செலுத்தும் நாள் எனவும், இந்த நாடு அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  பிரித்தானிய அரசை எதிர்த்து 40 கோடி மக்கள் ரத்தம் சிந்தி நமக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தனர். இன்று 140 கோடி மக்களாக இருக்கும் நாம் ஒன்றுபட்டால் 2047ஆம் ஆண்டுக்குள்  வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கலாம்.

இந்த ஆண்டும், கடந்த சில ஆண்டுகளாகவும் அதிகரித்து வரும் இயற்கை பேரிடர்கள் நம்மை கவலை கொள்ள செய்கிறது. இயற்கைப் பேரிடரில் பலர் தங்கள் குடும்ப சொந்தங்களை, சொத்துக்களை இழந்துள்ளனர்.

தேசமும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இன்று, அவர்கள் அனைவருக்கும் எனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன், இந்த நெருக்கடியான நேரத்தில் இந்த தேசம் அவர்களுடன் நிற்கிறது என்று நான் அவர்களுக்கு உறுதியளிக்கிறேன்.

உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக இந்தியாவை உருவாக்க வேண்டும். நாட்டு மக்கள் அகண்ட பாரதத்துக்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும்” இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.