சுகந்தனின் பூதவுடலுக்கு இளைஞர்கள் இறுதி அஞ்சலி

28.07.2023 19:46:58

சுகந்தனின் பூதவுடலுக்கு இளைஞர்கள் இறுதி அஞ்சலிவவுனியா, தோணிக்கல் பகுதியில் வீடு பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்தில் படுகாயமடைந்து மரணமடைந்த சீர்திருத்த விளையாட்டு கழகத்தின் செயலாளர் சுகந்தனின் பூதவுடலுக்கு இளைஞர்களால் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.            

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த குழுவொன்று வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டதுடன் பெற்றோல் ஊற்றி வீட்டை கொழுத்தினர்.

இதில் சம்பவ இடத்திலேயே 21 வயது பாத்திமா என்ற இளம் குடும்ப பெண் மரணமடைந்து இருந்ததுடன், தீக்காயங்களுக்கு உள்ளான அவரது கணவரான சுகந்தன் கடந்த புதன்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

மரணமடைந்த சீர்திருத்த விளையாட்டு கழக செயலாளரான சுகந்தனின் உடல் காலை 11 மணியளவில் வவுனியா, உக்குளாங்குளத்தில் அமைந்துள்ள சீர்திருத்த விளையாட்டுக் கழக மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

சீர்திருத்த விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் தேவா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், தலைவர் அஞ்சலி தீபம் ஏற்ற இளைஞர்கள் பொதுமக்கள் சுகந்தனின் உடலுக்கு மலர்மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.  

இந்த நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவருமான கு.திலீபன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சந்திரபத்மன், கிராம அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் பரமேஸ்வரன், பொது அமைப்புக்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கழக உறுப்பினருக்கும் அஞ்சலி செலுத்தினர்.