தலிபான் அரசு பதவி ஏற்புக்காக சீனாவுக்கும் அழைப்பு
ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு பொறுப்பேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க பாகிஸ்தான், சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பினர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். இதையடுத்து அங்கு, 20 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது. சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளும் வகையிலான அரசு அமைக்கப்படும் என தலிபான்கள் உறுதி அளித்துள்ளனர்.
தலிபான்கள் தலைமையிலான புதிய அரசு விரைவில் பதவி ஏற்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பாகிஸ்தான், துருக்கி, கத்தார், ரஷ்யா, சீனா, ஈரான் ஆகிய நாடுகளுக்கு தலிபான்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.இந்த தகவல் தலிபான்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலிபான்களின் செய்தி தொடர்பாளர் ஸபிஹுல்லா முஜாஹித் கூறுகையில், ''நம் நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள் நம் நாட்டை மறுகட்டமைப்பு செய்ய மாட்டார்கள். மக்கள் தான் ஒன்றிணைந்து அதை செய்து முடிக்க வேண்டும்,'' என்றார்.