கேரளாவை உலுக்கிய கொலை வழக்கு: குற்றவாளி சிறை சமையல் அறை வழியாக தப்பியோட்டம்

09.07.2022 10:17:00

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த ஷான் பாபு கடந்த ஜனவரி மாதம் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். ஷான் பாபுவை கடத்திய கும்பல் அவரை கொடுமை படுத்தி கொலை செய்தனர். அவரது உடல் முழுவதும் 38 இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. ஷான் பாபுவை கொலை செய்த கும்பல் அவரது உடலை போலீஸ் நிலையம் முன் போட்டுவிட்டு தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பாபுவை கடத்தி கொலை செய்த ஆட்டோ டிரைவர் பினுமொன் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

கொலை குற்றவாளிகள் அனைவரும் கோட்டயத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவனான பினுமொன் இன்று அதிகாலை சிறையில் இருந்து தப்பிச்சென்றுள்ளான். சிறையில் உள்ள சமையல் அறை வழியாக இன்று அதிகாலை 5.30 மணியளவில் குற்றவாளி பினுமொன் தப்பியோடியுள்ளார். இதையடுத்து, சிறையில் இருந்து தப்பியோடிய குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மோப்பநாய் உதவியுடன் போலிசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மிகவும் பாதுகாப்பு நிறைந்த சிறையில் இருந்து சமையல் அறை வழியாக கொலை குற்றவாளி தப்பிச்சென்றது எவ்வாறு? என்பது குறித்தும் உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.