சமூக பரவலாக மாறும் குரங்கம்மை: மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுகோள் !

22.05.2022 16:23:00

பிரித்தானியாவில் குரங்கம்மை நோய் சமூகப் பரவலாக மாற அதிக வாய்ப்பு இருப்பதாக அந்த நாட்டின் சுகாதார தலைமை அதிகாரி சூசன் ஹாப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக கொறித்துண்ணி விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் குரங்கம்மை (Monkeypox) நோய்கள் பிரித்தானியா, கனடா, வடக்கு அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது.

வெள்ளிக் கிழமை நிலவரப்படி பிரித்தானியாவில் இதுவரை 20 குரங்கம்மை பாதிப்புகள் உறுதிப்படுத்தபட்ட நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், பிரித்தானியாவில் குரங்கம்மை பாதிப்பு குறித்த எந்தவொரு பயணத் தொடர்பும் இல்லாத நபர்களிடமும் வைரஸ் பாதிப்பு தென்படத் தொடங்கி இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் புதிய குரங்கம்மை பாதிப்புகளின் எண்ணிக்கை குறித்த அறிக்கைகள் திங்கள் கிழமை வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, குரங்கம்மை நோய் பரவல் சமூக தொற்றாக மாறியுள்ளதா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரித்தானியாவில் தலைமை மருத்துவ ஆலோசகர் சூசன் ஹாப்கின்ஸ், பிரித்தானியாவில் தினசரி அடிப்படையில் புதிய குரங்கம்மை நோய் கண்டறியப்பட்டு வருகிறது, இதனால் குரங்கம்மை நோய் பரவல் சமூக பரவலாக மாறுவதற்கான அதிகப்படியான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் இந்த வைரஸ் பாதிப்பினால் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளாரா என கேட்டதற்கு அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை, ஆனால் நோய் பரவலானது நகர்ப்புறங்களில் உள்ள ஓரினச்சேர்க்கையாளர்கள் அல்லது இருபால் ஆண்களிடையே அதிகரித்து காணப்படுவதாக தெரிவித்தார்.

இந்த நோய் பரவலானது பொதுமக்களை பாதிக்கும் அளவு குறைவு, இருப்பினும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.