மீண்டும் இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல்..

07.07.2021 11:52:49

இலங்கையில் கொரோனா பரவல் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகள் தீவிரமடைந்து வருவதன் காரணமாக இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்க பிரஜைகள் மீள் பரிசீலனை செய்யுமாறு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நேற்று வெளியிட்ட புதிய பயண அறிவுறுத்தலுக்கமைய, கொவிட் பரவல் அதிகரித்திருப்பதன் காரணமாக இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வது தொடர்பில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இலங்கையில் பயங்கரவாத செயற்பாடுகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளும் அதிகரித்துள்ளன என்றும் அந்த எச்சரிக்கை மட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேருந்து நிலையம், விமான நிலையம், சுற்றுலா விடுதிகள், உணவகங்கள் உள்ளிட்ட இடங்களை இலக்கு வைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என இந்த புதுப்பிக்கப்பட்ட அறிவித்தல் ஊடாக சுற்றுலா பயணிகளுக்கு நினைவூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஹோட்டல், கிளப், உணவகங்கள், வழிபாட்டுத் தலங்கள், பூங்காக்கள், முக்கிய விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்வுகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் ஏனைய பொதுப் பகுதிகளிலும் ஆபத்தில் உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.