செக் குடியரசை 2-1 என வீழ்த்தி டென்மார்க் அணி வெற்றி : இங்கிலாந்துடன் அரையிறுதி

04.07.2021 09:56:05

 

யு.இ.எஃப்.ஏ யூரோ கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டி ஒன்றில் செக் குடியரசை 2-1 என வீழ்த்தி டென்மார்க் அணி வெற்றிபெற்றுள்ளது.

அஜர்பைஜானில் இடம்பெற்ற இப்போட்டியில் டென்மார்க் அணி சார்பாக தோமஸ் டெலானி ஆட்டத்தின் முதல் 5 ஆவது நிமிடத்தில் கோலை அடித்தார்.

பின்னர் 42 ஆவது நிமிடத்தில் டென்மார்க் அணி சார்பாக காஸ்பர் டோல்பெர்க் மீண்டும் ஒரு கோலை அடிக்க 2-0 என்ற கணக்கில் முதல்பாதியில் டென்மார்க் அணி முன்னிலை வகித்தது.

பின்னர் விறுவிறுப்பாக இடம்பெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் பதிலுக்கு செக் குடியரசு வீரர் பேட்ரிக் ஷிக் ஒரு கோலை அடித்தார்.

இருப்பினும் பின்னர் பல தடவைகள் கோலை அடிக்க இரு அணிகளும் முயற்சித்தபோதும் அது பலனளிக்காததால் இறுதியில் 2-1 என டென்மார்க் அணி வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்ற டென்மார்க் அணி, எதிர்வரும் 8 ஆம் திகதி இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.