தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம்: மு.கஸ்டாலின் மத்திய அரசிடம் வலியுறுத்தல்

12.03.2024 08:40:40

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு  தடுத்து வைக்கப்பட்டுள்ள 22 தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுவிப்பதற்கு இராஜதந்திர ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழக  முதலமைச்சர் மு.கஸ்டாலின் மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

 

இது குறித்து  முதலமைச்சர் மு.கஸ்டாலின், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கருக்கு அவசர கடிதம் ஒன்றையும்  அனுப்பி வைத்துள்ளார்.
அக் கடிதத்தில்  ”இலங்கை கடற் படையினரால் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற கைது நடவடிக்கைகள் காரணமாக தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களது குடும்பத்தின்  நலன் கருதி அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் முன்னெடுத்த சோதனையின் போது, சட்டவிரோதமாக எல்லைத்தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 22 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில்,குறித்த மீனவர்களை 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.