கேரளாவை சுட்டிக்காட்டி திமுகவை சீண்டிய மாணிக்கம் தாகூர்!
|
"ஆட்சியில் பங்கு.. அதிகாரத்தில் பங்கு" கோரிக்கையை காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தொடர்ச்சியாக எழுப்பி வரும் நிலையில், தை முதல் நாளான இன்றும் கூட்டணி கட்சியான திமுகவை சீண்டி பதிவிட்டுள்ளார். இது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கூட்டணி ஆட்சி உட்பட பல்வேறு விஷயங்களைப் பற்றி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி எம்.பி மாணிக்கம் தாகூர் தொடர்ச்சியாக பேசி வருகிறார். |
|
கூட்டணி ஆட்சி என தவெக தலைவர் விஜய் கூறி வரும் நிலையில், காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் கருத்துகள் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தமிழக காங்கிரஸில் வலுத்துள்ளது. இதனால் திமுக கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் ஐபிடிஎஸ் நடத்திய தேர்தல் கருத்துக்கணிப்பு ஒன்றை சுட்டிக்காட்டி தமிழகத்தில் கூட்டணி இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்றும், அதிகாரப் பங்கீட்டிற்கு நேரம் வந்துவிட்டது என்றும் தெரிவித்திருந்தார். இதனால், திமுக கூட்டணிக்குள் புகைச்சல் ஏற்பட்டதாக கருத்து நிலவியது. இந்நிலையில், தை முதல் நாளான இன்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தை பிறந்தால் வழி பிறக்கும்.. ஆட்சியில் பங்கு என்பது என்ன என்பதை நாம் அறிய ஒரு மாடல். கேரளாவின் UDF மாடல் கூட்டணி அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான நம்பிக்கையான பாதையை காட்டுகிறது. காங்கிரஸ் தலைமையேற்கிறது - ஆனால் அதிகாரம் குவிக்கப்படவில்லை; பகிரப்படுகிறது. நட்பு +பங்கு இதுவே UDF அரசியலின் அடித்தளம். UDF-ல் நாங்கள் தேர்தலை ஒன்றாகவே எதிர்கொள்கிறோம். பரஸ்பர நம்பிக்கையும், ஒரே அரசியல் நோக்கமும் அவர்களின் பலம். முக்கியமானது - தேர்தல் முடிந்ததும் கூட்டணிக்கு "பை-பை" சொல்லுவதில்லை. தேர்தலில் கூட்டாளிகள், ஆட்சியிலும் பங்கு பெறும் கூட்டாளிகளே. அமைச்சர் பதவிகளும் முக்கிய துறைகளும் பலத்தையும், உடன்பாட்டையும், பொறுப்பையும் அடிப்படையாகக் கொண்டு பகிரப்படுகிறது - ஆட்சி ஆதிக்கத்திற்காக அல்ல. IUML, Kerala Congress (M), RSP உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் நிதி, கல்வி, பொதுப்பணித்துறை, தொழில், சமூக நலன், நீர்வளம் போன்ற முக்கிய அமைச்சகங்களை பொறுப்புடன் நிர்வகித்தன. இது பெயருக்கான பங்கீடு அல்ல. கூட்டணிக் கட்சிகள் மைய துறைகளை நிர்வகித்து, முடிவெடுத்து, முழுப் பொறுப்பையும் ஏற்றன. முக்கிய கொள்கை முடிவுகள் UDF ஒருங்கிணைப்பின் மூலம், கேரளாவின் சமூக-அரசியல் பல்வகைமையை மதித்து எடுக்கப்பட்டன. தேர்தலுக்குப் பின் துரோகம் இல்லை. வாக்குகள் எண்ணப்பட்டதும் கூட்டணியை ஒதுக்கும் அரசியல் இல்லை. இதுதான் UDF மாடலின் வித்தியாசம். UDF மாடல் = கூட்டணி தர்மம் செயல்பாட்டில். ஒன்றாகப் போராடு. ஒன்றாக ஆட்சி செய். ஒன்றாக மக்களுக்கு வழங்கு. இந்த ஜனநாயகமான UDF மாடல் 2026-லும் வெற்றி பெற வேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும்.. நல்ல ஆட்சியாக மாறட்டும்." எனத் தெரிவித்துள்ளார். |