மகனுக்காக துபாயில் குடியேறும் மாதவன்

21.12.2021 09:08:44

விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை கதையில் உருவாகியுள்ள ராக்கெட்ரி என்ற படத்தை தயாரித்து, இயக்கி, நடித்திருக்கிறார் மாதவன். அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்தப் படம் தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் தயாராகி உள்ளது. 2022 ஏப்ரல் 1-ஆம் தேதி இப்படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் மாதவனுக்கு 16 வயதில் வேதாந்த் என்ற மகன் இருக்கிறார். நீச்சல் போட்டியில் சிறந்து விளங்கும் இவர் உலக அளவில் நடந்த பல நீச்சல் போட்டிகளில் ஏராளமான பதக்கங்களை பெற்று இருக்கிறார். சமீபத்தில் கூட பெங்களூரில் நடைபெற்ற தேசிய ஜூனியர் நீச்சல் போட்டியில் 7 பதக்கங்களை வென்றார். இப்படியான நிலையில் 2024ல் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்கு தயாராகி வருகிறார் வேதாந்த். இதற்காக தனது மகனை தயார்படுத்த பெரிய அளவிலான நீச்சல் குளங்கள் அமைந்துள்ள துபாயில் குடும்பத்துடன் குடியேற போகிறார் மாதவன். இந்த தகவலை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் மாதவன்.