9ஆம் திகதி போராட்டம் வெடிக்கும் !

08.08.2022 10:02:36

9ஆம் திகதி போராட்டம் வெடிக்கும்

எதிர்வரும் ஒன்பதாம் திகதி அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் உட்பட அனைத்து தரப்பினரும் இணைந்து ரணில் ராஜபக்சவுக்கு எதிராக மக்கள் கட்டளை பிறப்பிக்க உள்ளதாக தொழிற்சங்க கூட்டமைப்பின் பிரதிநிதியும், ஜே.வி.பியின் மத்திய குழு உறுப்பினருமான வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் இந்த அறைகூவலை விடுத்துள்ளார்.

இதன் போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு அது அல்ல

ரணில் ராஜபக்ச கலப்பு அரசாங்கத்தை அமைத்தாலும் அது நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு அல்ல.

ரணில் விக்ரமசிங்க அதிபர் நாற்காலியில் அமர்வதற்கு முன்னர் போராட்டம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்களையும் முன் வைத்திருந்தார். நாற்காலியில் அமர்ந்த பின்னர் போராட்டம் சட்டவிரோதமானது, பாசிசவாதம் கொண்டது எனக் கூறுவது தவறானது.

ரணில் விக்ரமசிங்க வைத்து ராஜபக்சர்கள் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் கனவு இதுவல்ல.

தத்தமது நகரங்களில் எதிர்ப்பு நடவடிக்கை

இதனை அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது அரசாங்கத்திற்கு நாம் பகிரங்கமாகவே கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

ஆகையினால், நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தத்தமது நகரங்களில் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். அனைவரும் தமது தொழில் இடங்களில் இருந்து வந்து போராட வேண்டும் எனக் கூறியுள்ளார்.