இராணுவத்திற்கு காணிகளை வழங்க முயற்சித்த அதிகாரிகளை துரத்தியடித்த யாழ் மக்கள்.

28.11.2022 10:56:01

யாழில் காணிகளை சிறிலங்கா இராணுவத்திற்கு வழங்குவதற்கு முயற்சித்த அதிகாரிகளை மக்கள் வெளியேற்றியுள்ளனர்.

யாழ். காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஜே/44 கிராம சேவகர் பிரிவில் உள்ள 44 குடும்பங்களுக்கு சொந்தமான 11 ஏக்கர் காணிகளை இராணுவத்திற்கு வழங்குவதற்கு அப்பகுதி மக்கள் பாரிய எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

குறித்த காணியை அளவிடுவதற்கு வந்த நில அளவை திணைக்களத்தினர் மக்களின் எதிர்ப்பையடுத்து அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில்,

“நாங்கள் சொந்த காணிகள் இல்லாமல் வாடகை வீடுகளில் இருந்து மழையிலும் தண்ணீரிலும் அல்லல்ப்படுகின்றோம்.

தொடரும் போராட்டம்

எங்களது நிலையை கருத்தில் கொள்ளாது இராணுவத்தினருக்கு காணி வழங்குவதற்கு முயற்சிக்கின்றனர். இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அண்மையில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், மக்களது காணிகளை மக்களுக்கே வழங்குவதாக ஆளுநர் குறிப்பிட்டிருந்தார்.

இது இவ்வாறு இருக்க நில அளவை திணைக்களத்தினர் இன்றையதினமும் காணி அளவீட்டிற்கு வருகைதந்திருக்கின்றனர். காரைநகர் பிரதேச செயலர் தமக்கு காணி அளவிடுமாறு அறிவித்தல் வழங்கிய நிலையிலேயே தாங்கள் காணி அளவிடுவதற்கு வருகை தந்ததாக நில அளவை திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கை தொடருமானால் எங்களது போராட்டங்களும் தொடரும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் காணியின் உரிமையாளர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், சமூகமட்ட அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.