மின் உற்பத்தி நிலையங்களை ரஷியா போர்க்களமாக மாற்றி வருகிறது -அதிபர் ஜெலென்ஸ்கி

21.10.2022 11:58:12

தண்ணீரும் மின்சாரமும் இல்லாமல் குளிரில் வாடினாலும், ரஷியாவை அதிகமாக வெறுப்போம் என்று உக்ரைன் மக்கள் கூறினர்.
 

உக்ரைனில் உள்ள மின் நிலையங்களை குறி வைத்து ரஷிய ராணுவம் தாக்கி வருகிறது. கடந்த சில நாட்களாக உக்ரைனின் முக்கியமான உள்கட்டமைப்பைத் தாக்க ரஷியா டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி வருகின்றது. உக்ரைன் மின் நிலையங்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியை ரஷியா அழித்துள்ளது. இதனால் உக்ரைனில் பல பகுதிகளில் மிகப்பெரிய அளவில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலில் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்,"எங்கள் நாட்டின் எரிசக்தி கட்டமைப்புகளை போர்க்களமாக மாற்ற ரஷிய தலைமை கட்டளையிட்டுள்ளதாக தெரிகிறது.

இதன் விளைவுகள் ஐரோப்பாவில் உள்ள நம் அனைவருக்கும் மிகவும் ஆபத்தானவை. உக்ரைனில் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு, மின்சாரம் மற்றும் குளிர்காலத்தை சாமாளிப்பது தொடர்பான பிரச்சினைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு ரஷியா தாக்குதல்களை தொடுத்துள்ளது.

எரிசக்தி கட்டமைப்புகள் மீதான ரஷிய படைகளின் தாக்குதல்கள் அதிகமானதால், ஏராளமான உக்ரேனியர்கள் ஐரோப்பா நோக்கி செல்கின்றனர்.

ஒவ்வொரு வீட்டிலும் மின்சாரத்தை குறைவாக பயன்படுத்துவது மற்றும் சிறிய அளவிலான மின்சார சேமிப்பு ஆகியவை கூட மின் விநியோக செயல்பாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவர உதவும் என்று கீவ் நகர மேஜர் விட்டலி கிளிட்ச்கோ வலியுறுத்தியுள்ளார். மின் நிலையங்களை குறிவைத்து ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரேனியர்கள் பதிலடி கொடுத்தனர். "இது நம் அணுகுமுறையை மாற்றப் போவதில்லை. நாம் அவர்களை அதிகமாக வெறுப்போம்.

நான் ரஷியாவில் இருப்பதை விட, தண்ணீரும் மின்சாரமும் இல்லாமல் குளிரில் உட்கார விரும்புகிறேன்" என்று உக்ரைனில் வாழும் ஒரு பெண்மணி கூறினார். மின்சாதன பொருட்கள் கடை வைத்திருக்கும் எலக்ட்ரானிக்ஸ் விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், "ஜெனரேட்டர்கள் மற்றும் பேட்டரிகள் போன்ற சாதனங்களை வாங்க மக்கள் முண்டியடித்து வருகின்றனர்.

இங்கு குளிர்காலத்தில் வெப்பநிலை, 16 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதை எங்களால் சமாளிக்க முடியும். நம்மால் வாழ முடியாதது என்று எதுவும் இருக்காது" என்றார்.