ரமழான் உணவு விழாவுக்கு எதிர்ப்பு

23.02.2024 08:55:32

இந்த ஆண்டு மார்ச் 12-ம் திகதி ரமழான் நோன்பு காலம் தொடங்குவதால், பெங்களூருவில் உணவுத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த உணவுத் திருவிழாவுக்கு பிரேசர் டவுன் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த சங்கத்தின் சார்பில் 3,500 பேர் கையெழுத்திட்டு, புலிகேசிநகர் காங்கிரஸ் எம்எல்ஏ ஏ.சி. சீனிவாசாவிடம் மனு அளித் துள்ளனர்.

அவர்கள் தங்கள் மனுவில் கூறியிருப்பதாவது: “ரமழான் உணவுத் திருவிழா காரணமாக பிரேசர் டவுனில் 40 நாட்களுக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பணிக்குச் செல்வோர் கடும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். கடந்த ஆண்டு உணவுத் திருவிழாவில் ஒரு கடையில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் காயம் அடைந்தவர்களை மீட்க நோயாளர் காவு வண்டி (ஆம்புலன்ஸ்) வர முடியாத நிலை ஏற்பட்டது.

ரம்ழான் உணவுத் திருவிழாவினால் குப்பை, புகை, கழிவு நீர்போன்ற சுகாதார கேடுகள் ஏற்படுகின்றன. இங்கு இறைச்சி உணவு வகைகள் தூய்மையற்ற முறையில் சமைக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் அதனை உண்ணும் மக்கள் உடல் நலக்குறைவுக்கு ஆளாகின்றனர். எனவே ரமழான் உணவுத் திருவிழாவை பிரேசர் டவுனில் நடத்தக்கூடாது.” என தெரிவித்துள்ளனர்.