பாகிஸ்தானில் தொடரும் ஆணவக்கொலைகள்

07.05.2022 11:35:07

பாகிஸ்தானில் மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றும் பெண்கள் குடும்ப உறுப்பினர்களால் ஆணவக்கொலை செய்யப்படும் சம்வங்கள் தொடர்கதையாகி வருகின்றன. 

 

கடந்த 2016-ம் ஆண்டு பாகிஸ்தானை சேர்ந்த நடிகையும், மாடல் அழகியுமான கந்தீல் பலூச்சை அவரது சகோதரர் கழுத்தை நெரித்து கொலை செய்தது பாகிஸ்தான் மட்டும் இன்றி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதேபோல் ஒரு சம்பவம் தற்போது மீண்டும் நடந்துள்ளது. பாகிஸ்தானின் பஞ்சப் மாகாணம் ஒகாரா மாவட்டத்தை சேர்ந்த சித்ரா என்கிற 21 வயது பெண் நடனக்கலைஞராகவும், மாடல் அழகியாகவும் இருந்து வந்தார். ஆனால் சித்ரா இந்த துறையில் இருப்பதை அவரது குடும்பத்தினர் விரும்பவில்லை.

 

இது குடும்ப பாரம்பரியத்துக்கு எதிரானது என்றும், எனவே நடனம் மற்றும் மாடலிங் துறையில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் சித்ராவை அவரது குடுபம்பத்தினர் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளனர். ஆனால் சித்ரா அதை ஏற்கவில்லை. இந்த நிலையில் சித்ராவின் உறவுக்காரர் ஒருவர் சித்ரா பொது இடத்தில் நடனமாடும் வீடியோ ஒன்றை அவரின் சகோதரர் ஹம்சாவுக்கு செல்போனில் அனுப்பினார். 

 

அதை பார்த்து ஆத்திரத்துடன் வீட்டுக்கு சென்ற ஹம்சா நடனம் மற்றும் மாடலிங் துறையை உடனடியாக கைவிட வேண்டும் என கூறி சித்ராவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி சித்ராவை சரமாரியாக தாக்கினார். அதன் பின்னரும் ஆத்திரம் அடங்காத ஹம்சா உடன்பிறந்த சகோதரி என்றும் பாராமல் சித்ராவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். இது தொடர்பான புகாரின் பேரில் ஹம்சாவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.