பயங்கரவாதத்துக்கு ஆதரவு கூடாது; ஐ.நா.,வில் தீர்மானம்
01.09.2021 07:04:33
ஆப்கனில் பயங்கரவாதிகளுக்கு தஞ்சம் அளிக்கும் நடவடிக்கைகள் கூடாது என வலியுறுத்தி, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தியா தலைமையில் நடந்த ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் ஆப்கன் தொடர்பான தீர்மானத்தை தாக்கல் செய்தன. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 15 உறுப்பு நாடுகளில் 13 நாடுகள் ஓட்டு போட்டன. இதையடுத்து தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.
தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது: பிற நாடுகளை அச்சுறுத்தவோ அல்லது தாக்கவோ ஆப்கன் பிராந்தியத்தை தலிபான் பயன்படுத்தக் கூடாது. பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பது, பயிற்சி அளிப்பது, பயங்கரவாத செயல்களுக்கு திட்டமிடுவது, நிதி திரட்டுவது போன்ற செயல்பாடுகளுக்கும் ஆப்கனில் இடமளிக்கக் கூடாது.