இலங்கைக்கான அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க இரு நாடுகள் முடிவு

06.07.2022 16:15:37

இலங்கைக்கான தேவையற்ற பயணங்களை தவிர்த்துகொள்ளுமாறு நியூசிலாந்து தமது நாட்டுப் பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளது.

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டள்ளது.

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கை

 

இலங்கை தற்போது பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது. எரிபொருள் இன்மையால் பொது போக்குவரத்து, வாடகை வாகனம், உணவு விநியோகம் என்பனவற்றுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக இலங்கைக்கான அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்த்து கொள்ளுமாறு நியூசிலாந்து கோரியுள்ளது.

பிரித்தானிய வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் விடுத்துள்ள அறிவுறுத்தல்

இதேவேளை, இலங்கைக்கான அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்த்து கொள்ளுமாறு பிரித்தானிய வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் தமது பிரஜைகளை கோரியுள்ளது.

 

இலங்கையின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அந்த அலுவலகம் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதால், மருந்துகள், சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடானது போக்குவரத்து, வணிகங்கள் மற்றும் அவசர சேவைகளை பாதிக்கிறது. இதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இதன்போது, போக்குவரத்து பாதிப்பு, பாதைமூடல், அமைதியின்மை என்பன ஏற்படுகின்றன. இதன்காரணமாக இலங்கைக்கு அத்தியாவசியமான பயணங்களை மாத்திரம் மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு, பொதுநவலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் கோரியுள்ளது.