யாழ் மாவட்ட அரச அதிபராக பெரும்பான்மை இனத்தவரா ?

27.07.2021 01:11:15

யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக பெரும்பான்மையினத்தவர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக வெளியான தகவல் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

தமிழ் பேச இயலாத அரச அதிகாரியை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக நியமிப்பது ஜனநாயக விரோத செயல் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாக இரா.சம்பந்தன் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அதில், மிக விரைவில், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தமிழ் பேச முடியாத ஒருவர் அரசாங்க அதிபர் பதவியிக்கு நியமிக்கப்படவிருப்பதாக தமக்கு தகவல் கடைத்துள்ளதாக சம்பந்தன் குறிப்பிட்டள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 95 சதவீதமானவர்கள் தமிழ் பேசும் சமூகத்தினராவர், மேலும் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய நிர்வாகத்தை சேர்ந்தவர்களும் தமிழ் பேசும் சமூகத்தை சார்ந்தவர்களாக இருப்பதாக கூட்டமைப்பின் தலைவர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந் நிலையில் தமிழ் பேச தெரியாத ஒரு அரச உத்தியோகத்தரை அரசாங்க அதிபராக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நியமிப்பது பொருத்தமற்ற ஒரு விடயம் எனவும் இது ஜனநாயக விரோதமான செயலாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாவட்டத்திலுள்ள உயர் பதவியில் இருக்கும் அரச உத்தியோகத்தர் தமிழ் பேசும் ஒருவராக இருக்கும் சந்தர்ப்பத்திலேயே அவருடனான வாய்மூல மற்றும் எழுத்ததுமூல தொடர்பாடல்கள் பயனுள்ளதாக இருக்கும் எனவும் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களின் வரலாற்று ரீதியான பூர்வீக இடங்களான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதிய அரசியலமைப்பின் ஊடாக அதியுச்ச அதிகார பகிர்வை வழங்க அரசாங்கம் முயற்சிகளை எடுக்கும் சந்தர்ப்பத்தில் இத்தகைய செயற்பாடுகள் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துவதுடன், அது மக்களால் வரவேற்கப்பட முடியாத ஒன்றாக அமையும் எனவும் அவர் கூறியுள்ளார்.

எனவே அத்தகைய தீர்மானத்தை மீளாய்வு செய்து, மேற்குறித்த விடயங்களை கருத்தில் கொண்டு, யாழ்ப்பாண மாவட்டத்தின் அரசாங்க அதிபராக அனுபவமும் செயற்றிறனுமுள்ள தமிழ் பேசும் ஒரு அரச அதிகாரியை நியமிக்குமாறு கேட்டுக்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.