'எங்களது கனவுகள் தவிடுபொடியாகி விட்டன..!

01.09.2021 07:05:31

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியை கைப்பற்றி சர்வாதிகாரம் செய்துவரும் நிலையில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பிரபல விளையாட்டு வீரர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் பெண்கள் தேசிய கால்பந்து வீராங்கனை ஃபனூஸ் பஷீர் தாலிபான்கள் ஆட்சியை பிடித்ததும் நாட்டைவிட்டு வெளியேற முடிவெடுத்தார். இதனையடுத்து அவர் பிரான்ஸ் நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் தற்போது தஞ்சம் புகுந்துள்ளார். எங்கள் நாட்டு பெண்கள் விளையாட்டுத்துறை முன்னேற்றத்துக்காக பல கனவுகளை நாங்கள் கண்டுகொண்டிருந்தோம். ஆப்கானிஸ்தான் பெண்களின் எதிர்காலம், விளையாட்டுத்துறையில் அவர்களுக்கு இருந்த ஆர்வம் ஆகியவை தற்போது இருள் அடைந்துவிட்டது என்று ஃபனூஸ் பஷீர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

'தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து விடுவார்களோ என்கிற அச்சம் எங்களுக்கு இருந்துகொண்டே இருந்தது. இனி ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு எதிர்காலமே கிடையாது' என்றார். 1996 ஆம் ஆண்டுமுதல் 2001 ஆம் ஆண்டுவரை தாலிபான் ஆட்சியில் பெண்கள் விளையாட்டுத்துறையில் கலந்துகொள்ளத் தடை விதிக்கப்பட்டது. பெண்கள் பணிக்குச் செல்லவே தடை விதிக்கப்பட்டு இருந்த காலம் அது.


ஆப்கானிஸ்தான் கால்பந்து அணியின் பிரபல வீராங்கனையான ஃபனூஸ் பஷீர் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியபோது புர்கா அணிந்து தனது முகத்தை முழுவதுமாக மூடிக் கொண்டு தெருக்களில் உலவியது குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக தனது விளையாட்டு வீராங்கனை அடையாளத்தையே வெளிகாட்ட முடியாமல் அவர் ஆப்கானிஸ்தானில் அவதியுற்றார்.

'சொந்த மண்ணை விட்டு வெளியேறுவது சொல்லொணாத் துயரத்தை தரும் விஷயம். இனி நான் என் வாழ்க்கையை மீண்டும் பூஜ்ஜியத்தில் இருந்து துவங்கவேண்டும் என்று அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.