வரலாற்றின் அவலம்! 32ஆவது நினைவுதினம்

10.09.2022 13:00:00

சத்துருக்கொண்டான் படுகொலை

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலையின் 32ஆவது ஆண்டு நினைவு தினம் உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது.

படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக சத்துருக்கொண்டான் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியருகே இந்த நினைவேந்தல் நிகழ்வு நேற்று (09) மாலை நடைபெற்றது.

படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வின்போது நினைவுத்தூபியில் நினைவுச்சுடர்கள் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டதனை தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்கான பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மதகுருமார், மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் உள்ளிட்ட படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகளும் கலந்துகொண்டிருந்தனர்.

184 பேர் படுகொலை

கடந்த 1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 09ஆம் திகதி இராணுவத்தினருடன் இணைந்து ஊர்காவல் படையினரால் சத்துருக்கொண்டான், கொக்குவில், பிள்ளையாரடி கிராமங்களைச் சேர்ந்த கர்ப்பிணித் தாய்மார்கள், பச்சிளம் குழந்தைகள், அங்கவீனம் அடைந்தவர்கள் எனப் பலர் கொண்டுசெல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

இதில் 5 கைக்குழந்தைகள், 42 பத்து வயதுக்கும் குறைவான சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் உட்பட 184 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்தப் படுகொலை தொடர்பாக விசாரணைகள் நடைபெற்றபோதும், இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்தவித தண்டனைகளும் வழங்கப்படவில்லையென இப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக கவலை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது