கொஹுவல மேம்பாலத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பம்

13.01.2022 05:51:57

கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ஹங்கேரிய நிதியுதவியுடன் கொஹுவல மேம்பாலத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ஹங்கேரிய வர்த்தக மற்றும் வெளிவிவகார அமைச்சர் பீட்டர் சியார்டோ ஆகியோரின் தலைமையில் கொஹுவல சந்தியில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த மேம்பாலம் கொஹுவல சந்தியிலிருந்து கொழும்பு – ஹொரணை 120 பஸ் மார்க்கத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

மேம்பாலம் நிர்மாணிக்கப்பட்ட பின்னர், மேம்பாலத்திற்கு கீழ் பகுதியினால் நுகேகொட – களுபோவில வீதிக்கு செல்ல முடியும்.

ஹங்கேரி அரசாங்கத்தின் நிதி உதவியுடன் கொஹுவல மேம்பாலம் 297 மீட்டர் நீளமும் 9.4 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது. மேலும், மேம்பாலம் பாலத்தின் கீழ் பகுதியில் நான்கு வழிப்பாதை அமைக்கப்படவுள்ளதுடன் நுகேகொட களுபோவில வீதியில் போக்குவரத்து சமிக்ஞைகளை பயன்படுத்தி போக்குவரத்து கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்படும்.இந்த திட்டத்திற்கான மதிப்பீடு 2648 மில்லியன் ரூபாவாகும். இந்த திட்டம் 22 மாதங்களில் பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.