போதையில் பெற்றோலை ஊற்றி வெறியாட்டம் – கணவன் மரணம்

20.09.2021 05:32:58

யாழ்., அல்லைப்பிட்டியில் மதுபோதையில் தற்கொலை செய்ய தனக்குத் தானே பெற்றோல் ஊற்றியபோது அடுப்பில் பெற்றோல் பாய்ந்து நெருப்பு எரிந்தமையால் கணவன் உயிரிழந்ததோடு மனைவி எரிகாயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதன்போது அல்லைப்பிட்டியைச் சேர்ந்த 48 வயதுடைய சோமசேகரம் ரவிச்சந்திரன் என்னும் 10 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார்.

இவர் மதுபோதையில் உடன் பிறந்த அண்ணரைத் திட்டிப் பேசியுள்ளார். இதன்போது தமையனும் திரும்பித் திட்டிப் பேசியதால் தமையன் மீது தாக்குதல் நடாத்தியுள்ளார். இதனால் தமையன் கையில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

அண்ணாவைத் தாக்கி விட்டேன் எனக் கூறியவாறு அதன் கவலையில் தனக்குத் தானே பெற்றோல் ஊற்றிய வேளை அருகில் மனைவி சமையலில் ஈடுபட்டிருந்தார். இதன்போது பெற்றோல் சமையல்  அடுப்பில் ஊற்றுப்பட்டு பற்றி எரிந்தமையால் சமையலில் ஈடுபட்டிருந்த  மனைவி மீது நெருப்பு பற்றிக்கொண்டது.

மனைவியில் பற்றிய நெருப்பு கணவர் மீதும் பற்றியது. கணவர் தன் மீது பெற்றோலை ஊற்றியிருந்தமையால் அதிக நெருப்பு பற்றிக்கொண்டது.

உடனடியாக வீட்டார் இருவரையும் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்த்தபோதும் ஒரு மணி நேரத்துக்குள் கணவர் உயிரிழந்தார். மனைவி தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

உயிரிழந்தவரின் மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.