கோவை விமான நிலையத்திற்கு 92 துப்பாக்கி குண்டுகளுடன் வந்த தொழிலதிபர்
கோவை விமான நிலையத்தில் சென்னை செல்ல வந்த பயணியிடம் இருந்து 92 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பிளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூரில் பனியன் நிறுவனம் நடத்தி வருபவர் சசிக்குமார். சசிகுமார் தொழில் நிமித்தமாக சென்னை செல்வதற்காக கோவை விமானம் நிலையம் வந்தார். இண்டிகோ விமானம் மூலம் சென்னை செல்வதற்காக வந்த அவரது உடமைகள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
உடமைகளை ஸ்கேன் செய்தபோது அவர் கொண்டு வந்த பையில் 92 துப்பாக்கி குண்டுகள் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கும், பீளமேடு காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
மேலும், அவரிடம் விசாரணை மேற்கொண்ட பொழுது முறையாக அனுமதி பெற்று துப்பாக்கி லைசன்ஸ் வைத்திருப்பது தெரிய வந்தது. எனினும் தொழிலதிபர் சசிகுமாரையும் , அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி குண்டுகளையும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பீளமேடு காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் விமான நிலைய அதிகாரிகளின் புகாரின் பேரில் துப்பாக்கி குண்டுகள் எடுத்து வரப்பட்டது குறித்து சசிகுமாரிடம் பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓரே நேரத்தில் 92 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது கோவை விமான நிலைய வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.