4-வது முறையாக பரோல் நீட்டிப்பு

27.04.2022 09:52:15

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பெண்கள் தனிச்ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த முருகனின் மனைவி நளினிக்கு பரோல் வழங்க வேண்டும் என்று கோரி அவரது தாயார் பத்மா கடந்த டிசம்பர் மாதம் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த கோரிக்கையை ஏற்று நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த டிசம்பர் 27-ந்தேதி நளினி ஒரு மாதம் பரோலில் வந்து காட்பாடியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.

தினமும் காட்பாடி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நளினி பரோலை நீட்டிக்க வேண்டும் என மனு வழங்கினார்.

இதையடுத்து, நளினியின் மனுவை சிறை நிர்வாகம் அரசுக்கு அனுப்பி வைத்தது. இந்நிலையில் இன்று ஜெயிலுக்கு திரும்ப வேண்டிய நளினிக்கு, 4-வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து நளினி மே மாதம் 27-ந்தேதி வேலூர் ஜெயிலுக்கு திரும்ப வேண்டும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.